20.9.16

தேசப் பற்று - சில கேள்விகள்

இந்தியா என் நாடு என்பதிலும் 
அதில் நான் உறுப்பினன் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லாமல்தான் இருந்தேன் - இருக்கிறேன் - 

ஆனால் எப்போதும் மீண்டும் மீண்டும் தேசப்பற்றை உறுதி செய்யும் குரல்கள் எழும்பிக் கொண்டே இருக்கின்றன.

ராம்குமார் சிறையில் கொல்லப் பட்டதற்கு வரும் எதிர்ப்புகளைக் கண்டு தேசியப் பற்றாளர்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள்.

"குற்றவாளி ராம்குமார் சிறையில் இறந்ததற்கு கொதித்துப் போயிருக்கிறீர்களே எத்தனை பேருக்கு எல்லையில் ராணுவ வீரர்கள் இறந்தது நமக்குத் தெரியும்? - நீங்கள் எல்லாம் மனிதர்களா? இந்தியர்களா?
ஜெய் ஹிந்த்" - என்று ஒரு செய்தி வாட்ஸ் ஆப் - பில் வந்தது.
= = = = 

இறந்த இராணுவ வீரர்களுக்கு வீர வணக்கங்களும் 
அவர்களை இழந்த குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

= = = = 

ஐயா தேசப் பற்றாளரே 
இப்ப எதுக்கு இவ்வளவு கோபம்?

ஆற்றை அதன் போக்கில் விடாமல் தடுத்த கர்நாடக நண்பர்களை பார்த்து சொல்லுங்கள் - ஜெய்ஹிந்த்...

இந்தியாவில் அங்கம் வகிக்கும் தமிழகத்திற்கு சொட்டு நீர் கூட கொடுக்க முடியாது என்று சொல்லி தமிழகப் பதிவெண் கொண்ட பேருந்துகளை, சரக்கு லாரிகளை, கார்களை எரித்த அவர்களிடம் சொல்லுங்கள் ஜெய் ஹிந்த்...

தமிழ் பேசுகிறான் என்பதற்காக அவர்களை, துகில் உரித்து, அறைந்து, காவிரி கன்னடர்களுக்கே என்று கன்னடத்தில் சொல்ல வைத்த அந்த காட்டுமிராண்டிகளைப் பார்த்து சொல்லுங்கள் ஜெய் ஹிந்த் ....

அங்கே அடிவாங்கியவர்கள் இந்தியர்கள் இல்லையா?
இழந்த சொத்துக்கள் இந்தியாவைச் சார்ந்தது இல்லையா? 

அப்போதெல்லாம் ஆவேசப் படாத நீங்கள் திடீரென பாய்ந்து வருவது ஏன்?

எல்லைபாதுகாப்பு எப்போதும் ஆபத்து நிறைந்ததுதான். அவர்களுக்கு சல்யூட் செய்ய வேண்டியது அவசியம் தான்... அதற்காக,

இந்தத் தருணத்தில் நடக்கும் காட்டு மிராண்டித்தனங்களை பற்றி நாம் பேசக் கூடாதா?

இந்தத் தருணத்தில் நடக்கும் உரிமை மீறல்கள் பற்றி பேசிக் கூடாதா?

இந்தியாவின் பாதுகாப்புக்கு எவ்வளவு முக்கியத் துவம் இருக்கிறதோ அந்த அளவுக்கு நீதிமன்றங்களும் முக்கியம். நீதிமன்றங்களை அவமதிக்கும் போதும் இந்த ஆவேசம் வேண்டும்.

சட்டத் துறையைப் போல காவலும் அவசியம்தான். காவல் தூதர்கள் மனித உரிமைகளையும் மீற முடியாது. குற்றம் உறுதி செய்யப் படும் வரை அவன் குற்றவாளி அல்ல. நாளை உங்களைக் கூட கைது செய்யலாம். சிறையில் வைக்கலாம். அதனால் நீங்கள் குற்றவாளி ஆகிவிட மாட்டீர்கள். உங்களுக்கும் மர்மமான சாவு வரலாம். அப்போதும் நாங்கள் மர்ம இறப்புகளுக்கு விளக்கம் கேட்டுக் குரல் எழுப்புவோம்.

ஏனெனில் மனித உரிமை என்பது எல்லாருக்கும் பொதுவானது.





13.9.16

காவு வாங்கும் காவிரி

ஆற்றுக்கு அணை 
வயலில் மனை
 தீராத வினை

அவன் ஆற்றில் அணை போடுகிறான் 
நாம் வயலில் மனை போடுகிறோம்.


அவனுக்கு உணவு தேவை - எனவே ஆற்றில் நீர் பதுக்குகிறான்.
 நமக்கு மனை தேவை எனவே ஆற்றில் மணல் எடுக்கிறோம்.

அவன் அணை கட்டி நீரைத் தேக்குகிறான்.
நாம் நீர் தேங்க இடமில்லாமல் மனை  காட்டுகிறோம்.

ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் 
ஆற்றுக்கு அணை 
என்பது அதோடு முடிந்து விடுவதல்ல 

அதைத் தொடர்ந்து 
காற்றுக்கு வேலி யும் வரும்.

நாம் குளம் அழித்து 
மணல் எடுத்து,
மனை கட்டி 
வாழ வரும் போது 
மரமும் இருக்காது 
மழையும் இருக்காது

காற்றுக்காயும் 
கையேந்தும்  
காலம் வரும்.

ஆற்றுக்கு அணை 
வயலில் மனை
 தீராத வினை